உழைக்கும் வர்க்கத்தின் உழைப்பிற்கு உரிய பெறுமதி வழங்குவோம்: பிரதமர்

உழைக்கும் வர்க்கத்தின் உழைப்பிற்கு உரிய பெறுமதி வழங்குவோம் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தனது மே தின வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

குறித்த வாழ்த்துச் செய்தியில்,

உழைப்பிற்கு உரிய பெறுமானத்தை வழங்கவும், நல்லதொரு எதிர்காலத்தை உருவாக்கவும் இம்முறை மே தினத்தை ஆக்கபூர்வமான வகையில் பயன்படுத்திக் கொள்வோம். ஒட்டுமொத்த உலகமும் உழைக்கும் மக்களின் வியர்வையினால் தங்கியுள்ளது.

வரலாற்றுக் காலம் முதல் தங்களது உரிமைகளுக்காக தொழிலாளர்கள் மேற்கொண்டு வந்த போராட்டங்கள், அர்ப்பணிப்புக்களுக்கான அங்கீகாரமாக உலக மே தினம் அனுஸ்டிக்கப்படுகின்றது.

தற்போதைய காலத்தில் உழைப்பாளி என்பதற்கு விரிவான ஓர் அர்த்தம் கற்பிக்கப்படுகின்றது. கடந்த காலங்களில் தொழிற்சாலையில், பண்ணையில் கடமையாற்றிய தொழிலாளர்களே உழைப்பாளி என அழைக்கப்பட்டனர்.

எனினும் தற்போது உழைப்பினை வழங்கும் அனைத்து தரப்பினரும் உழைப்பாளிகளாக கருதப்படுகின்றனர். இதனால் அவர்கள் எதிர்நோக்கி வரும் பிரச்சினைகளும் பலவிதமானதாக காணப்படுகின்றது.

உழைக்கும் மக்களின் உழைப்பிற்கும் உரிய பெறுமதியை வழங்கும் எதிர்காலத்தை கட்டியெழுப்ப அர்ப்பணிப்புடன் செயற்படுவோம் என பிரதமர் தெரிவித்துள்ளார்.