கோவில்களில் சுடும் தரையில் அங்கப்பிரதட்சணம் எதற்காக?

பொதுவாக கோவிலுக்குச் செல்பவர்கள் இடமிருந்து வலப் பக்கமாக மூன்று முறையாவது தெய்வச்சிலை உள்ள கருவறையைச் சுற்றி நடப்பார்கள். ஆனால் சிலர் மட்டும், வேண்டுதல்படி, நடப்பதற்குப் பதிலாக படுத்து உருண்டுகொண்டு சுற்றுவார்கள்.

ஒரு சக்தி வடிவத்தை சுற்றி வரும்போது, தெய்வீக சக்தியை கிரகிக்கும் தன்மை அதிகரிக்கிறது. ஆனால், நாம் வாழும் இடத்தைப் பொறுத்து அது இரண்டு விதமாக உள்ளது. பூமத்திய ரேகைக்கு வட பகுதியில், அதாவது இந்தியா போன்ற நாடுகளில் வாழ்பவர்கள், கருவறையைச் சுற்றி வலப்புறமாகவும் (கடிகாரம் சுற்றும் திசையில்), பூமத்திய ரேகைக்கு தென் பகுதியில் வாழ்பவர்கள் இடப்புறமாகவும் சுற்றவேண்டும்.

இந்த வேறுபாட்டினை ஒரு உதாரணம் மூலம் விளக்குவோம்… பூமத்திய ரேகைக்கு வட பகுதியில் நீர்த் துளியோ வேறெதோ பொருளோமேலிருந்து கீழ் வரும்போது, அந்தப் பொருள் சுழன்றுக் கொண்டே கீழே விழுமானால், அது வலப்புறமாகசுற்றி விழும். குழாயைத் திருப்பினால்கூட நீர் வலப்புறமாகவே சுற்றி விழுவதைப் பார்க்க முடியும்.

பூமத்திய ரேகைக்கு கீழே அதாவது தென்புறமுள்ள நாடுகளில் இது இடப்பக்கம் நிகழும். சரியாக பூமத்திய ரேகையில் அமைந்துள்ள ஊர்களில், இதை ஒரு சுற்றுலா அம்சமாக வைத்திருப்பார்கள். பூமத்திய ரேகைக்கு அந்தப்பக்கம் உள்ள குழாயைத் திருப்பினால் தண்ணீர் ஒரு திசையிலும் இந்தப் பக்கம் குழாயைத் திருப்பினால் தண்ணீர் வேறு திசையிலும் சுற்றி விழும்.

இதனால்தான், பூமத்திய ரேகைக்கு மேல்புறமுள்ள நம் நாட்டில் ஒரு சக்தி ரூபத்தை பிரதட்சிணம் செய்யும்போது வலப்புறமாக சுற்றுகிறார்கள். இதனால், தெய்வீகத்தின் தன்மையை கிரகிக்கும் திறன் அதிகமாகிறது. ஆனால், ஏன் படுத்துக் கொண்டு உருளுகிறார்கள்?

அனைவராலும் ஒரு இடத்திலேயே உட்கார்ந்து கொண்டு முழுமையாக தங்களை அர்ப்பணிக்க முடிவதில்லை. ஏதோ ஒரு செயல் மூலம்தான் தங்களை அர்ப்பணிக்க முடிகிறது. செயல் எந்த அளவு தீவிரமாக இருக்கிறதோ அந்த அளவிற்கு அவர்களால் தங்களை முழுமையாக அர்ப்பணிக்க முடிகிறது. அதனால்தான், மக்கள் இதுபோன்ற வழிகளை உருவாக்கிக் கொண்டார்கள்.

நடந்து சுற்றுவதற்குப் பதிலாக உருண்டு கொண்டே சுற்றுகிறார்கள். ஆனால், கஷ்டப்பட்டு செய்யும்போதுதான், மக்களுக்கு ஒரு அர்ப்பணிப்பு உணர்வும், மனநிறைவும் ஏற்படுகிறது. இப்படிச் செய்யும்போது, சக்தியை கிரகிப்பதற்கு ஏதுவாக, தங்களை அதிகமாக திறந்தநிலையில் வைத்துக்கொள்ள முடிகிறது. இதனால்தான், உருண்டு கொண்டே கோவிலைச் சுற்றுகிறார்கள். அதுவும், கோவிலைச் சுற்றி வெளிப்புறமுள்ள கருங்கல் தரை, சுட்டெரிக்கும் சூரியன் என எதுவும் தடையாய் இருப்பதில்லை.