மஹிந்த ஆட்சியில் தவறுகள் நடைபெற்றன! ஏற்றுக்கொள்ளும் நாமல்

கடந்த ராஜபக்ச அரசாங்கத்தில் தவறுகள் இடம்பெற்றதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச ஏற்றுக்கொண்டுள்ளார்.

அவ்வாறான தவற்றுக்கு தற்போது வரையிலும் இழப்பீடு செலுத்தப்படுவதாக நாமல் தெரிவித்துள்ளார்.

பணம் தூய்மையாக்கல் குற்றச்சாட்டு தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச உட்பட மூவருக்கு நேற்று கொழும்பு உயர் நீதிமன்றத்தினால் பிணை வழங்கப்பட்டது.

இதனை தொடர்ந்து ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதில் வழங்கும் போது அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தமது அரசாங்க காலத்தில் அரசாங்க ஊழியர்கள் மற்றும் பொலிஸ் அதிகாரிகள் சிலரினால் மேற்கொள்ளப்பட்ட தவறான செயற்பாடுகள் காரணமாக இந்த தவறுகள் இடம்பெற்றுள்ளதாக நாமல் சுட்டிக்காட்டியுள்ளார்.

பிள்ளைகள் என்றாலும் செவிமடுக்காதமையினாலேயே அடம்பிடிக்கின்றது. பல்கலைக்கழக மாணவர்களும் தங்கள் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்காமையினாலேயே அவ்வாறு நடந்து கொள்கின்றார்கள். 5 வருட பதவி காலம் நிறைவடையும் வரையில் பிரச்சினைகளை கண்டு கொள்ளாமல் இருப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

பல்கலைக்கழக மாணவர்களினால் நியமிக்கப்பட்ட தற்போதைய அரசாங்கம் இவ்வாறு செயற்படுவது தற்போது சிக்கலான நிலைமையாகவே உள்ளதென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.