ஐ.எஸ். தீவிரவாதிகளின் அராஜக ஆட்சியை வீழ்த்தி விட்டோம்: ஈராக் அறிவிப்பு

சிரியா மற்றும் ஈராக்கில் அரசுப் படைகளை எதிர்த்து தாக்குதல் நடத்தி வரும் தீவிரவாதிகள் ஐ.எஸ்.ஐ.எஸ். என்ற பெயரில் அழைக்கப்படுகிறார்கள். ஐ.எஸ்.ஐ.எஸ். என்பது ‘இஸ்லாமிக் ஸ்டேட் ஆப் ஈராக் அன்ட் சிரியா’ (சிரியா மற்றும் ஈராக்கில் நாடு கடந்த இஸ்லாமிய ஆட்சி) என்ற ஆங்கில வார்த்தையின் சுருக்கம் ஆகும்.

ஈராக்கையும், சிரியாவின் ஒரு பகுதி மற்றும் துருக்கியின் ஒரு பகுதி ஆகியவற்றையும் இணைத்து தனி இஸ்லாமிய நாட்டை உருவாக்குவது இவர்களது திட்டமாகும். இதுமட்டுமல்லாமல் எதிர்காலத்தில் பக்கத்து நாடான லெபனான், பாலஸ்தீனம், இஸ்ரேல், ஜோர்டான், துருக்கி ஆகிய நாடுகளையும் ஒன்றிணைத்து பெரிய அளவிலான இஸ்லாமிய தேசத்தை உருவாக்கவும் திட்டமிட்டனர்.

இதன் முதல்கட்டமாக, மூன்றாண்டுகளுக்கு முன்னர் சிரியாவின் எல்லையோரம் உள்ள ஈராக்கின் மொசூல் நகரை கைப்பற்றிய இப்படையினர் அங்கிருக்கும் கிறிஸ்தவர்கள், யாஸிதிகள் மற்றும் குர்த் இன மக்களை ஊரை விட்டு அடித்து விரட்டி விட்டு இஸ்லாமிய அரசை அமைத்துள்ளதாக அறிவித்தனர்.

அங்குள்ள வரலாற்று சிறப்புமிக்க நூரி மசூதியை தங்களது தலைமையிடமாக்கி ஈராக் மற்றும் சிரியா நாடுகளின் எல்லையோரத்தில் உள்ள சில இடங்களை அடுத்தடுத்து கைப்பற்றினர்.

பல இடங்களில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க கிறிஸ்துவ தேவாலயங்களை இடித்து தரைமட்டமாக்கினர். அப்பகுதியில் வசித்த கிறிஸ்தவர்களையும் ஊரை விட்டே விரட்டியடித்ததுடன், அங்கு வாழும் முஸ்லிம் பெண்களின் மீதும் மதக் கட்டளை என்ற பெயரில் பெண்ணுறுப்பை சிதைத்தல் உள்பட ஏகப்பட்ட கட்டுப்பாடுகளை விதித்து அட்டூழியம் செய்து வருகின்றனர்.

சிரியாவின் ரக்கா நகரை ஏற்கனவே கைப்பற்றி அந்நாட்டில் தங்களது தலைமை பீடமாக அமைத்துக் கொண்டுள்ள ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள்  வடக்கு மற்றும் கிழக்கு சிரியாவின் பல பகுதிகளையும் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். கடந்த 29-6-2014 அன்று இந்த அராஜக ஆட்சியின் மன்னனாக ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தின் தலைவன் தன்னை பிரகடனப்படுத்தி கொண்டான்.

இவர்களின் பிடியில் உள்ள நகரங்களில் வசிக்கும் அனைவரும் இஸ்லாம் மதத்தை தழுவ வேண்டும் என்றும் கட்டளையிடப்பட்டுள்ளது. இவர்களின் ஆவேசத்தை கண்டு அஞ்சி நடுங்கிய குர்திஷ் மற்றும் யாஸிதி இனத்தை சேர்ந்த பெண்கள், குழந்தைகள் உள்பட சுமார் 20 ஆயிரம் மக்கள் ஊரை விட்டு விரட்டப்பட்டனர். மலை உச்சிகளில் தஞ்சமடைந்து, குடிக்க நீரின்றியும், உண்ண உணவின்றியும் பல மாதங்களாக அவர்கள் தவித்தனர்.

தங்களின் கட்டளைக்கு அடிபணிய மறுப்பு தெரிவித்த பெண்கள், குழந்தைகள் என ஆயிரக்கணக்கானவர்களை தலையில் சுட்டுக்கொன்ற ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள், அவர்களின் பிணங்களின் மீது ஏறி நின்று ஆவேசக் கூச்சலிடும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி கோடிக்கணக்கான மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

தங்களது எண்ணத்தின்படி, மோசூல் நகரில் ஒரு தலைமையிடத்தை ஆட்சிபீடமாக அமைத்த பின்னர் ஐ.எஸ்.ஐ.எஸ். என்னும் தங்களது அமைப்பின் பெயரை ஐ.எஸ். (இஸ்லாமிக் ஸ்டேட்) என்று சுருக்கி அமைத்து கொண்டனர்

இந்நிலையில், அமெரிக்க விமானப்படை துணையுடன் ஐ.எஸ். தீவிரவாதிகளை தங்கள் நாட்டில் இருந்து ஒழித்துக்கட்ட ஈராக் அரசு தீர்மானித்தது. கடந்த இரண்டாண்டுகளாக மோசூல் நகரை மீட்பதற்காக ஈராக் படைகளுக்கும் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கும் இடையில் கடுமையான போர் நடைபெற்று வருகிறது, கடந்த மூன்று மாதங்களாக உச்சக்கட்டத்தை அடைந்துள்ள இந்த போரின் விளைவாக மோசூல் நகரில் ஐ.எஸ். தீவிரவாதிகள் முதன்முதலாக  கைப்பற்றி, தங்களது தலைமை ஆட்சிபீடமாக அறிவித்த நூரி மசூதி மற்றும் அதையொட்டியுள்ள அல்-ஹட்பா கோபுரத்தை ஈராக் படைகள் நேற்று கைப்பற்றின.

இதன் மூலம் ஐ.எஸ். தீவிரவாதிகளின் அராஜக ஆட்சியை வீழ்த்தி விட்டோம் என ஈராக் பிரதமர் ஹைடர் அல்-அபாடி அறிவித்துள்ளார். போலி இஸ்லாமிய ஆட்சியின் முடிவுநாளை இன்று நாம் காண்கிறோம் என்று குறிப்பிட்ட அவர் இந்த சாதனைக்காக ஈராக் ராணுவம் மற்றும் பன்னாட்டு கூட்டுப்படைகளுக்கு பாராட்டும் தெரிவித்துள்ளார்.

ஐ.எஸ். தீவிரவாதிகளை ஒழித்துக்கட்டும் பணியில் அங்கே முகாமிட்டுள்ள அமெரிக்காவை உள்ளடக்கிய கூட்டுப்படையின் செய்தி தொடர்பாளரான கர்னல் ரியான் டில்லான் என்பவரும் ஈராக் பிரதமரின் கருத்தினை முன்மொழிந்துள்ளார். இந்தப் போரின் இறுதிகட்டம் சில நாட்களிலோ, ஒரு வாரத்துக்குள்ளாகவோ, சில வாரங்களிலோ எட்டப்படும் என்று அவர் கூறியுள்ளார்.