மரப்பல்லிகளில் பல நோய்களை குணப்படுத்தும் ரசாயன கலவைகள்…..

கிழக்கு இந்திய மாநில வனப்பகுதியில் காணப்படும் மரப்பல்லிகள் மருத்துவ குணம்நிறைந்ததாக கருதப்படுவதால் சட்டவிரோதமாக அவை பல லட்சம் ரூபாய்க்காக வேட்டையப்படுவதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அழிந்து வரும் இனமாக கருதப்படும் கீகோஸ் எனப்படும் மரப்பல்லிகளில் பல நோய்களை குணப்படுத்தும் ரசாயன கலவைகள் இருப்பதாக நம்பும் சீன மருத்துவர்கள் அதனை நோயாளிகளுக்கு மருந்தாகவும் அளித்து வருகின்றனர்.

மரப்பல்லிகளின் எண்ணிக்கை சீனாவில் வெகுவாக குறைந்த நிலையில், தற்போது இந்தியாவின் கிழக்கு மாநிலங்களில் உள்ள வனப்பகுதிகளை கொள்ளையர்கள் குறிவைத்து வருகின்றனர்.

ஒரு மரபல்லியின் விலை 70 லட்சம் ரூபாய் வரை சர்வதேச சந்தையில் விலை போவதால், உயிரை பணயம் வைத்து வேட்டையர்களும், கொள்ளையர்களும் இந்திய வனப்பகுதிகளிலிருந்து மரப்பல்லிகளை வேட்டையாட தொடங்கியுள்ளனர்.

40 சென்டி மீட்டர் மற்றும் 200கிராம் கொண்ட இவ்வகை பல்லிகளை பழங்குடியினர் சிலர் பிடித்து வைத்திருந்தது தொடர்பாக எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் விசாரணை நடத்திய போது இவ்விவகாரம் வெளியுலகிற்கு தெரியவந்தது. மிசோரம், அசாம், மேற்குவங்கம், மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் இந்த மரப்பல்லி வேட்டை வெகு சிறப்பாக நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.