
வவுனியா மாவட்டத்தில் வாழும் சிங்கள மக்களுக்கு 800 கல் வீடுகள் அமைக்கப்படுகின்றன. ஆனால் அங்கு வாழும் தமிழ் மக்களுக்கு ஆயிரத்து 800 பொருத்து வீடுகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்று குற்றஞ் சாட்டப்பட்டது.
வவுனியா மாவட்டத்தின் பொஸ்வேவாப் பகுதியில் உள்ள சிங்கள மக்களுக்கு 800 கல் வீடுகள் தேசிய வீடமைப்பு அதிகார சபையால் அமைக்கப்படுகின்றன. அவை ஒவ்வொன்றும் 5.5 லட்சம் ரூபா பெறுமதியில் அமைக்கப்படுகின்றன.
அந்தப் பகுதியில் 2013ஆம் ஆண்டின் இறுதியில் வந்து குடியேறிய குடும்பங்களே அதிகமாக வாழ்கின்றன. இவ்வாறு வாழும் குடும்பங் கள் 3 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு ஒரு பிரிவினர் முல்லைத்தீவு மாவட்டத்துடனும் இன்னும் ஓர் பிரிவினர் வவுனியா மாவட்டத்துடனும் மற்றொரு பிரிவினர் அநுராதபுரம் மாவட்டத்துடனும் இணைக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு 3 மாவட்டங்களின் பிரதேசங்களுக்கும் பகுதி பகுதியாகக் காணப்ப டும் அனைத்து மக்களுக்குமான வீட்டுத் தேவையை நிறைவு செய்யும் பொறுப்பு வவுனியா மாவட்டச் செயலகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தமிழ் அரசியல்வாதிகளும் தமிழ் மக்களில் கணிசமானோரும் எதிர்ப்புத் தெரிவிக்கும் பொருத்து வீடுகளை வவுனியா மாவட்டத்தில் வாழும் ஆயிரத்து 800 குடும்பங்களுக்கு வழங்கவுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டது. இதனை வழங்கும் நடவடிக்கையை மீள்குடியேற்ற அமைச்சு முன்னெடுத்துள்ளது.