இணையத்தில் பட்டைய கிளப்பும் ” பாம்பு சட்டை ” டீசர்!

உலகின் அழகான பெண் இவர் தான்: மனம் திறந்த டிரம்ப்

அமெரிக்காவில் 45வது ஜனாதிபதியாக குடியரசு கட்சியின் டொனால்ட் டிரம்ப் அடுத்தாண்டு பதவி ஏற்க உள்ளார்

இதைத் தொடர்ந்து அவர் தொடர்பான பல செய்திகள் இணையத்தில் வெளிவரத் தொடங்கியுள்ளன.

இந்நிலையில் டிரம்ப் உலகின் அழகான பெண் செர்பியா நாட்டைச் சேர்ந்த டென்னிஸ் வீராங்கனை Ana Ivanovic தான் என கூறியுள்ளார்.

கடந்த மூன்று வருடங்களுக்கு முன்னர் டிரம்ப் வணீக முதலீடு தொடர்பாக ஆலோசிக்க செர்பியா நாட்டு பிரதமர் Ivica Dacic க்கை சந்தித்து 15 நிமிடம் கலந்துரையாடினார்.

அதன் பின்னர் டென்னிஸ் வீராங்கனை Ana Ivanovic உடன் சந்திப்பை முடித்த அவர், உலகின் மிகவும் அழகான பெண் Ana Ivanovic என்று கூறி அவரை வர்ணித்தார். அதன் பின் அவருடன் எடுத்த புகைப்படத்தையும் வெளியிட்டார்.

தற்போது அவர் ஜனாதிபதி ஆகியுள்ள நிலையில் டிரம்ப் தொடர்பான பல புகைப்படங்கள் இணையத்தில் உலா வரும் நிலையில் இப்புகைப்படமும் சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றன.

Ivanovic(29) ஜெர்மனியைச் சேர்ந்த பிரபல கால்பந்து வீரரான Schweinsteige என்பவரை அண்மையில் திருமணம் செய்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

trump-g

நட்டி நட்ராஜ் நடிப்பில் வெளியவுள்ள ” எங்கிட்ட மோதாதே” படத்தின் டிரெய்லர்!

செல்வங்களை அருளும் விரதம்

பத்ரச்ரவஸ் என்ற மன்னன், சுரசந்திரிகா தம்பதியரின் மகள் சியாமபாலா. பத்ரச்ரவஸ் மிகச்சிறந்த விஷ்ணு பக்தன். இவன் தனது மகளை சக்கரவர்த்தியான மாலாதரனுக்கு திருமணம் செய்து கொடுத்தான். ஒரு முறை மகாலட்சுமி வயதான சுமங்கலி வேடத்தில், சுரசந்திரிகா அரண்மனைக்கு வந்தாள்.

சுரசந்திரிகாவிடம் வரலட்சுமி விரதத்தைப் பற்றி விரிவாக கூறி அதை கடைப்பிடிக்கும் படி கூறினாள். மகளை பிரிந்த ஏக்கத்தில் இருந்த சுரசந்திரிகா, லட்சுமி தேவியை யாரோ என்று கருதி விரட்டி விட்டாள். லட்சுமி தேவியை விரட்டியதால், சுரசந்திரிகாவும், பத்ரச்ரவஸ் மன்னனும் செல்வங்களை இழந்து, நாட்டையும் இழந்து வறுமை நிலைக்குச் சென்றனர்.

இதைக்கேள்வி பட்ட சியாமபாலா, லட்சுமி தேவியை சமாதானப்படுத்தி, அவரிடம் இருந்து வரலட்சுமி விரத முறைகளை விரிவாக கேட்டு தெரிந்து கொண்டாள். பின்னர் பக்தியுடன் அந்த விரதத்தை கடைப்பிடித்தாள். விரத மகிமையில் அவள் செல்வச் சிறப்பை அடைந்தாள்.

லட்சுமி தேவியை அவமானப்படுத்திய அவளது பெற்றோரும், அந்த விரதத்தை கடைப்பிடித்தனர். அதன் பிறகு சுரசந்திரிகா தான் இழந்த செல்வங்களை மீண்டும் பெற்றாள்.

நாடாளுமன்றில் சாப்பாட்டால் பலரை கதி கலங்க வைத்த ஜனாதிபதி மைத்திரி!

இலங்கையின் சமகால ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மிகவும் எளிமையானர் என்ற நன்மதிப்பை பெற்றுள்ளார்.

அதனை நிரூபிக்கும் வகையில் மற்றுமொரு சம்பவம் இன்று நடைபெற்றுள்ளது.

நாடாளுமன்றில் இன்று வரவு செலவுத்திட்டம் தொடர்பான சிறப்பு அமர்வு நடைபெற்று வருகிறது. இதன் போது ஜனாதிபதியும் அங்கு பிரசன்னமாகி இருந்தார்.

நாடாளுமன்ற வளாகத்திற்குள் ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் தயாரிக்கப்படும் உணவு வழங்கும் சிற்றூண்டி சாலை அமைக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொள்ளும் அனைவரும் அங்கு உணவருந்துவது வழமை.

எனினும் ஜனாதிபதி மைத்திரிபால தனக்கான மதிய நேர உணவை வீட்டிலிருந்து கொண்டு சென்றுள்ளார். இன்றைய நாடாளுமன்ற அமர்வுக்கு முன்னர் எளிமையான முறையில் அங்கு உணவருத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியிடப்பட்டு வருகிறது.

இளம்பெண்ணிடம் இருந்து வெளியே வந்த ஆரஞ்சுநிற கட்டி என்ன? திடுக்கிடும் வீடியோ

பொதுவாக பெண்களின் வயிற்றில் கட்டி தான் இருக்கும், அதை சர்ஜரி செய்து டாக்டர்கள் வெளியே எடுப்பார்கள் என்பதை கேள்விப்பட்டிருக்கின்றோம்.

ஆனால் கலிபோர்னியாவை சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கு வலது கையில் 6 இன்ச் அளவுக்கு ஒரு கட்டி இருந்துள்ளது.

இந்த கட்டியை சர்ஜரி செய்து வெளியே எடுத்த டாக்டர்கள் அதிர்ச்சி அடைந்தனர். காரணம் அந்த் கட்டி ஆரஞ்சு நிறத்தில் கொழகொழ என இருந்தது.

இதுகுறித்த வீடியோ ஒன்று யூடியூப் இணையதளத்தில் மூன்றே மணி நேரத்தில் 530,000 பார்த்துள்ளனர். இந்த வீடியோவை நீங்களும் பார்க்க வேண்டுமா? இதோ இந்த லிங்க்கை சொடுக்குங்கள்

Hip Hop தமிழாவின் “மீசைய முறுக்கு“ படத்தின் அழகிய பாடல் உங்களுக்காக!

பூலோகத்தில் மதிப்பை இழந்த அஷ்டமி, நவமி திதிகள்

சிவபெருமான் பூலோகத்திலிருக்கும் அனைத்து உயிரினங்களுக்கும் தேவையான அடிப்படைச் சக்திகளை, பாகுபாடு இல்லாமல் வழங்கச் சூரியன், சந்திரன் இருவருக்கும் தனிக் காலக்கணக்கை உருவாக்கினார். அதன்படி சூரியனும், சந்திரனும் தங்கள் பணியைச் செய்து வந்தனர். சிறிது காலத்திற்குப் பின்பு சந்திரன் தனது பணியைச் சரியாகச் செய்யாமல் அவ்வப்போது ஏமாற்றத் தொடங்கினார். இதனால் பூலோகத்தில் இருக்கும் உயிரினங்கள், சந்திரனிடமிருந்து தங்களுக்குத் தேவையான சக்தி கிடைக்காமல் துன்பமடைந்தன.

இதை அறிந்த சிவபெருமான், சந்திரனை அழைத்து பணியை ஒழுங்காகச் செய்யும்படி அறிவுறுத்தினார்.

சந்திரனோ, ‘இறைவா! என்னுடைய தொடர் பணிக்கு இடையில், அவ்வப்போது சிறிது ஓய்வு தேவைப்படுகிறது. ஓய்வு இருந்தால் மட்டுமே தனது பணியைச் சிறப்பாகச் செய்ய முடியும்’ என்றார். இறைவனும் அதற்கு ஒப்புக்கொண்டார்.

அதன்பிறகு சந்திரனின் பணிக்காலத்தில் சில மாற்றங் களைச் செய்தார் சிவபெருமான். சந்திரன் பணியின் இடையில் சிறிது நேரம் ஓய்வெடுத்துக் கொள்ள அனுமதி வழங்கியதுடன், பணி நேரத்தில் ஏமாற்றாமல் இருக்க, சந்திரனின் பணியை பார்வையிடுவதற்காகவும் சிலரை நியமிக்கவும் முடிவு செய்தார். அதற்காக 16 பேரை தோற்றுவித்து, அவர்களுக்கான பணி நேரத்தைத் சமமாகப் பிரித்து புதிய காலக்கணக்கை உருவாக்கினார்.

அந்தக் கணக்கின்படி சந்திரனுக்கு ஒருநாள் முழுவதும் எந்தப் பணியும் இல்லாமல் முழு ஓய்வு கொடுக்கப்பட்டது. சந்திரனின் ஓய்வுக்கு யாரும் இடையூறு செய்யாமல் பார்த்துக் கொள்ள ஒருவரை நியமித்து அவருக்கு ‘மறைமதி’ (அமாவாசை) என்று பெயரிட்டார்.

ஓய்வு நாளுக்குப் பின்பான 14 நாட்கள், சந்திரனின் பணிகளை ஒவ்வொரு நாளும் சிறிது சிறிதாக அதிகரித்தார் ஈசன். அந்த 14 நாட்களும், சந்திரனின் பணி நேரத்தை கவனிக்கவும், அவரது ஓய்வு நேரத்தை இடையூறு செய்யாமல் பார்த்துக் கொள்ளவும் 14 பேர் நியமிக்கப்பட்டனர். அவர்களுக்கு பிரதமை, துதியை, திருதியை, சதுர்த்தி, பஞ்சமி, சஷ்டி, சப்தமி, அஷ்டமி, நவமி, தசமி, ஏகாதசி, துவாதசி, திரயோதசி, சதுர்த்தசி என்று பெயரிட்டார் சிவபெருமான்.

கடைசியாகச் சந்திரனுக்கு ஒரு நாள் முழுவதும் முழுநேரப் பணியளித்து, அன்றைய தினம் அவருடைய முழுநாள் பணியையும் பார்த்துக் கொள்வதற்குத் தான் தோற்றுவித்தவர்களில் மீதமிருந்த ஒருவரை நியமித்து, அவருக்குப் பூரணை (பவுர்ணமி) என்று பெயரிட்டார்.

சந்திரனின் முழுநாள் பணிக்குப் பின்பு, ஒவ்வொரு நாளும் அவருக்குச் சிறிது சிறிதாகப் பணி நேரத்தைப் பதினான்கு நாட்களுக்குக் குறைத்துக் கொண்டே வந்தார் சிவபெருமான். இந்த நாட்களுக்கு, முன் பகுதியில் சந்திரன் பணிநேரத்தைப் பெற்ற பதினான்கு பேருக்கும், அதே வரிசையில் சந்திரனின் பணிநேரத்தையே கொடுத்துப் பணி நேரத்தைச் சமன் செய்தார்.

பவுர்ணமி, இறைவன் தனக்கு மட்டும் ஒரு நாள் முழுவதும் பணி நேரத்தைக் கொடுத்து விட்டதாக நினைத்து வருத்தப்பட்டது. அமாவாசை, தனக்குச் சந்திரனைப் பார்வையிடும் பணியைக் கொடுக்காமல், அவரின் ஓய்வுக்கு இடையூறு வராமல் பார்த்துக் கொள்ளும் பணியைக் கொடுத்ததை நினைத்து வருந்தியது. மற்றவர்கள், தங்களுக்குப் பணிநேரம் சமமாக இருந்தாலும், அமாவாசை, பவுர்ணமிக்கு மட்டும் ஒருநாள் முழுப்பணியாகவும், தங்களுக்குப் பகுதிப்பணிகளாக இரு நாட்கள் பணியும் கொடுத்து விட்டதை நினைத்துக் கவலையடைந்தன.

அவர்களின் கவலையை அறிந்த சிவபெருமான், ‘சந்திரனைப் பார்வையிடும் பணியைப் பெற்ற நீங்கள் அனைவரும், பூலோகத்தில் ‘திதி’ என்னும் பெயரில் அழைக்கப்படுவீர்கள்’ என்றார்.

சிவபெருமான் இவ்வாறு பேசிக்கொண்டிருந்தபோது, அஷ்டமி, நவமி ஆகியோர் இறைவனின் பேச்சை கவனிக்காமல் பேசிக்கொண்டிருந்தனர். இதைக் கண்ட இறைவன், அவர்களிடம் தான் சொல்வதைக் கவனிக்கும்படி சொன்னார்.

பின்னர் தொடர்ந்து, ‘அமாவாசையைத் தொடர்ந்து வரும் பதினான்கு நாட்களும் உங்கள் வரிசைப் பெயரிலான திதியாகவும், அவை அனைத்தும் வளர்பிறைத் திதிகள் (சுக்லபட்சம்) என்றும் அழைக்கப்படும். இதுபோல் பவுர்ணமியைத் தொடர்ந்து வரும் பதினான்கு நாட்களும் உங்கள் பெயரில் தேய்பிறைத் திதிகள் (கிருஷ்ணபட்சம்) என்றும் அழைக்கப்படும். பூலோகத்தில் இந்த நாட்களில் செய்யப்படும் அனைத்து நற்செயல்களுக்கும் உங்கள் பெயர்களும் பயன்படுத்தப்படும். அதன் மூலம் தங்களுக்குப் பூலோகத்தில் மதிப்பு கிடைக்கும்’ என்று சொல்லிக் கொண்டிருந்தார்.

அப்போதும் ஈசனின் பேச்சைக் கவனிக்காமல் அஷ்டமி, நவமி இருவரும் பேசிக்கொண்டிருந்தனர். இதைக் கண்டு கோபமடைந்த சிவபெருமான், அவர்களைப் பார்த்து, ‘நான் உங்கள் பணியைப் பற்றியும், பூலோகத்தில் உங்களுக்குக் கிடைக்கவிருக்கும் சிறப்பைப் பற்றியும் சொல்லிக் கொண்டிருந்தேன். நீங்கள் அதைக் கவனிக்காமல் பேசிக் கொண்டிருந்தீர்கள். நான் உங்களை எச்சரித்தும், அதைக் கண்டு கொள்ளவில்லை. எனவே மக்கள் உங்கள் இருவரையும் விலக்கி வைப்பார்கள். அந்த நாட்களில் எந்த நல்ல காரியங்களையும் தொடங்கமாட்டார்கள்’ என்று சாபமிட்டார்.

அஷ்டமியும், நவமியும் கவலையடைந்து, ஈசனிடம் சாபத்தைத் திரும்பப் பெற வேண்டினர். ஆனால் இறைவன் மறுத்து விட்டார்.

விமோசனம்

பூலோக மக்கள், அஷ்டமி, நவமி திதி நாட்களை எந்த நற்செயலுக்கும் பயன்படுத்தாமல் விலக்கியே வைத்தனர். பூலோகத்தில் தங்களிருவருக்கும் மதிப்பில்லாமல் போனதை நினைத்து இருவரும் கவலையடைந்தனர்.

தங்களுக்கு ஏற்பட்ட சாபத்தில் இருந்து விடுபட எண்ணிய அவர்கள் இருவரும், தங்களது ஓய்வு நேரத்தில் சிவபெருமானை வழிபட்டு வந்தனர். அவர்களின் வழிபாட்டில் மகிழ்ந்த ஈசன், ‘அஷ்டமி, நவமி திதிகளே! நான் உங்களுக்கு கொடுத்த சாபத்தில் இருந்து விடுவிக்க முடியாது. நீங்கள் இருவரும் விஷ்ணுவை சந்தித்து உங்கள் குறைகளைக் கூறுங்கள், உங்களுக்கு வேறு ஒரு நல்ல பலன் கிடைக்கலாம்’ என்று அருளினார்.

அதன்படி அஷ்டமி, நவமி திதிகள் விஷ்ணுவை வழிபட்டு வரத் தொடங்கினர். அவர்கள் முன்பாக தோன்றிய விஷ்ணு, ‘சிவபெருமான் கொடுத்த சாபத்தில் இருந்து உங்களை விடுவிக்க என்னாலும் முடியாது. அதே வேளையில் பூலோகத்தில் உங்களுக்கும் நல்ல மதிப்பு கிடைக்க என்னால் உதவ முடியும். அதற்கு தாங்கள் இருவரும் பல ஆயிரம் ஆண்டுகள் காத்திருக்க வேண்டும். உங்களால் முடியுமா?’ என்றார்.

‘இறைவா!, பூலோகத்தில் எங்களுக்கு இருக்கும் அவப்பெயர் நீங்கி, நல்ல மதிப்பு கிடைத்தால் போதும். அதற்காக எத்தனை ஆயிரம் ஆண்டுகள் வேண்டுமானாலும் நாங்கள் காத்திருக்கத் தயார்’ என்றனர்.

அதைக் கேட்ட விஷ்ணு, ‘வரும் காலத்தில் பூலோகத்தில் நிகழவிருக்கும் என்னுடைய இரு அவதாரங் களுக்குப் பின்பு, உங்களிருவருக்கும் ஆண்டுக்கொருமுறை நல்ல மதிப்பு கிடைக்கும். அதுவரைப் பொறுமையுடன் காத்திருங்கள்’ என்று சொல்லி மறைந்தார்.

சில ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு விஷ்ணு, சித்திரை மாதம், வளர்பிறை நவமி திதியில் ராமனாக அவதாரம் செய்தார். அந்த நவமியில் பிறந்ததால் அவர் பல துன்பங்களை அடைய நேர்ந்தது. என்றாலும் ராமன் பிறந்த திதி என்பதால் பின்னாளில் ‘ராம நவமி’ என்ற பெயரில் நவமி திதிக்கு ஒரு மதிப்பு ஏற்பட்டது.

ராம அவதாரத்திற்கு பிறகு பல ஆயிரம் ஆண்டுகள் கழித்து, ஆவணி மாதம், தேய்பிறையில் அஷ்டமி திதியில் விஷ்ணு கண்ணனாக அவதாரம் எடுத்தார். பிறந்த உடனேயே பெற்றோரைப் பிரிய நேர்ந்தாலும், அவர் மனித வாழ்க்கைக்கான அறிவுரைகளை வழங்கி கண்ணன் உயர்ந்து நின்றார். கண்ணனின் பிறப்பால் அஷ்டமி திதியும் நன் மதிப்பைப் பெற்றது.

சிவபெருமானால் கொடுக்கப்பட்ட சாபத்திலிருந்து முழுமையாக விடுபட முடியாவிட்டாலும், விஷ்ணுவின் அவதாரங்களால் தங்களுக்குக் கிடைத்த தனிச்சிறப்பை நினைத்து அஷ்டமி, நவமி திதிகள் மகிழ்ச்சியடைந்தன.

தங்களை விட மேலான நிலையிலிருப்பவர்கள் அறிவுரை வழங்கும்போது, அதனை காதுகொடுத்து கேட்க வேண்டும். அந்த அறிவுரைகளை அலட்சியம் செய்யக்கூடாது. அவ்வாறு செய்தால் பெரும் துன்பமும், அவமதிப்பும் வந்து சேரும் என்பதையே அஷ்டமி, நவமி திதிகளின் சாப- விமோசனக் கதை நமக்கு எடுத்துரைக்கிறது.

அதிக வாக்குகளை பெற்றும் ஹிலாரி தோல்வியடைந்தார் ஏன்? அமெரிக்க தேர்தல் எவ்வாறு நடைபெறுகிறது?

அமெரிக்காவில் இடம்பெற்ற 45 ஆவது ஜனாதிபதி தேர்தலில் அதிக வாக்குகளை பெற்ற ஹிலாரி கிளின்டன் தேர்தலில் தோல்வியடைந்துள்ளமை அந்நாட்டு மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் ஹிலாரி கிளின்டன் 5 கோடியே 99 இலட்சத்து 26 ஆயிரத்து 386 வாக்குகளை பெற்று 47.7 வீதத்தில் 232 தேர்தல் வாக்குகளை பெற்றுக்கொண்டுள்ளார்.

இதேவேளை, ஹிலாரி கிளின்டனை எதிர்த்து குடியரசுக் கட்சியின் சார்பாக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட டொனால்ட் டிரம்ப் 5 கோடியே 96 இலட்சத்து 98 ஆயிரத்து 506 வாக்குகளை பெற்று 47.5 வீதத்தில் 290 தேர்தல் வாக்குகளை பெற்றுக்கொண்டுள்ளார்.

குறித்த தேர்தலில் ஹிலாரி கிளின்டன், டொனால்ட் டிரம்பினை விட 2 இலட்சத்து 27 ஆயிரத்து 880 வாக்குகள் அதிகம் பெற்றிருந்தாலும் தேர்தல் வாக்குகளில் டிரம்பினை விட குறைவாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

51 மாநிலங்களில் நடத்தப்பட்ட தேர்தல் வாக்கெடுப்பில் தற்போது வரை வெளியாகியுள்ள 50 மாநிலங்களின் முடிவுகளில் 29 மாநிலங்களிலும் வெற்றிக்கண்ட டொனால்ட் டிரம்ப், தேர்தல் முடிவுகள் வெளிவரவுள்ள மிச்சிகன் மாநிலத்திலும் முன்னிலையில் உள்ளார்.மேலும் வெளியாகியுள்ள 50 மாநிலங்களின் முடிவுகளில் 21 மாநிலங்களில் மட்டுமே ஹிலாரி கிளின்டன் வெற்றிக்கண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க தேர்தல் எவ்வாறு நடைபெறுகிறது? அதன் நடைமுறைகள் என்ன? BBC

2017 ஆம் ஆண்டு ஜனவரியில், உலகின் மிக சக்திவாய்ந்த நாடு ஒரு புதிய தலைவரை பெற்றிருக்கும்- ஆனால் அமெரிக்காவின் அதிபர் தேர்தல் நடைமுறைகள் என்ன? அது எவ்வாறு செயல்படுகிறது ?

அமெரிக்கா அதன் அதிபரை தேர்ந்தெடுக்கும் போது வெறும் நாட்டின் தலைவரை மட்டுமல்ல ஒரு மிகப்பெரிய அரசாங்கத்தின் தலைவரையும், இந்த உலகத்தில் இருக்கும் மிகப்பெரிய ராணுவத்தின் தளபதியையும் தேர்ந்தெடுக்கின்றது.

எனவே அது ஒரு முக்கிய பொறுப்பு. அது எப்படி செயல்படுகிறது என்று பார்ப்போம்.

அதிபராக தகுதி பெற்றவர்கள் யார்?

அமெரிக்காவின் அதிபராவதற்கு நீங்கள் “இயற்கையான முறையில்” அதாவது அமெரிக்காவில் பிறந்த அமெரிக்கக் குடிமகனாக இருக்க வேண்டும், குறைந்தது 35 வயதை கடந்திருக்க வேண்டும், மேலும் அங்கு 14 ஆண்டுகள் வாழ்ந்திருக்க வேண்டும்.

1933 ஆம் ஆண்டிலிருந்து அதிபராக இருந்த ஏறக்குறைய ஒவ்வொருவரும், ஆளுநராகவோ, செனெட்டராகவோ, ஐந்து நட்சத்திர ராணுவ தளபதியாகவோ இருந்துள்ளனர்.

கட்சியின் அதிபர் வேட்பாளராக நியமனமாவதற்கு முன் அல்லது ஊடகங்களின் கவனத்தை பெறுவதற்கும் முன் இந்த பதவிகளில் ஒன்றை வகித்திருந்திருக்கிறார்கள்.

அதிபர் தேர்தலின் வேட்பாளாராக குடியரசுக் கட்சியிலிருந்து ஒருவரும், ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த ஒருவரும் நியமிக்கப்படுவர்.

ஏன் ஹிலரியும் டொனால்ட் ட்ரம்பும்?

இரண்டு கட்சியிலும் அதிகாரபூர்வ அதிபர் வேட்பாளரை தேர்ந்தெடுக்க ஒவ்வொரு மாநிலத்திலும், கடல் கடந்த அமெரிக்கப் பிராந்தியங்களிலும் தொடர் தேர்தல்கள் நடத்தப்படும்; அந்த தேர்தல்கள் பிப்ரவரி மாதத்தில் தொடங்கும்.

ஒவ்வொரு மாநிலங்களிலும் வெற்றி பெறுபவர்கள், வேட்பாளார்கள் இறுதியாக தீர்மானிக்கப்படும், ஜூலை மாதம் நடைபெறவிருக்கும் கட்சி மாநாட்டில், வாக்களிக்க அதிகாரம் பெற்ற கட்சி உறுப்பினர்களை தங்களுக்கு ஆதரவாக பெறுவார்கள்.

அதிகப்படியான மாநிலத்தில் வெற்றி பெற்றால், இறுதி மாநாட்டில் அதிகப்படியான உறுப்பினர்களை அவர்களுக்கு ஆதரவாக பெறுவார்கள்.

2016 ஆம் ஆண்டில் ஜனநாயக கட்சியில் ஹிலரி கிளிண்டனும், குடியரசுக் கட்சியில் டொனால்ட் ட்ரம்பும் தான் அதிபர் வேட்பாளர்களாக வெற்றி பெற்றனர் மேலும் அவர்கள் அக்கட்சிகளின் அதிகாரபூர்வ வேட்பாளராக நியமிக்கப்பட்டனர்.

நவீன அமெரிக்க வரலாற்றில் மிகவும் செல்வாக்கற்ற இரண்டு அமெரிக்க அதிபர்கள் இவர்கள்தாம்.

வர்ஜீனியாவின் செனெட்டர், டிம் கெயினை ஹிலரியின் துணை அதிபர் வேட்பாளர்களாகவும், இந்தியானாவின் ஆளுனர் மைக் பென்ஸைக் குடியரசுக் கட்சியின் துணை அதிபர் வேட்பாளர்களாகவும், இரண்டு கட்சிகளும் தங்களின் கட்சி மாநாடுகளில் அறிவித்திருந்தனர்.

நவம்பரில் நடைபெறவிருக்கும் வாக்குபதிவு எவ்வாறு நடைபெறும்?

ஒவ்வொரு மாநிலத்திலும் அதிக வாக்குகளைப் பெற்ற வேட்பாளர்கள் அந்த மாநிலம் ஆதரவு தரும் அதிபர் வேட்பாளராக மாறுவார்.

538 உறுப்பினர்களை கொண்ட வெற்றியாளார்களை தீர்மானிக்கும் அமைப்பு, ’’தேர்தல் அவை’’ எனப்படும் ஆனால் அதில் அதிபரை தேர்ந்தெடுக்க 270 பேர் போதும்.

ஆனால் ஒவ்வொரு மாநிலமும் சமமானது அல்ல எடுத்துக்காட்டாக கலிஃபோர்னியாவில், கனெக்டிகட் என்னும் மாநிலத்தை காட்டிலும் 10 மடங்கு மக்கள் தொகை அதிகம் எனவே அது இரண்டும் சமமான நிலையை பெறாது.

சமீபத்தில் நடந்த மக்கள் தொகை கணக்கெடுப்புப்படி ஒவ்வொரு மாநிலமும் இம்மாதிரியான வாக்காளர்களை தேர்ந்தெடுக்கும் நபர்களை கொண்டிருக்கும் ; எனவே மாநிலங்களுக்கிடையே அந்த எண்ணிக்கை மாறுபடும்.

மக்கள் நேரடியாக வாக்களித்து அதிபரை தேர்வு செய்வதில்லை அவர்கள் அதிபரை தேர்ந்தெடுக்க வாக்களிக்கும் நபர்களையே தேர்வு செய்கின்றனர்.

இங்கு தான் இது சுவாரஸ்யமானதாக மாறுகிறது!

நெப்ராஸ்கா மற்றும் மேயின் ஆகிய மாகாணங்களை தவிர, மற்ற எல்லா மாநிலங்களிலும், வெற்றி பெறும் நபர் அந்த மாநிலத்தின் அனைத்து வாக்களிக்கும் உரிமை பெற்ற நபர்களையும் பெறுகிறார் .

எடுத்துக்காட்டாக நியூயார்க்கில் வெற்றிபெறுபவர் அந்த மாநிலத்தின் அனைத்து 29 வாக்களிக்கும் உரிமை பெற்றவர்களையும் பெறுகிறார்.

ஆனால், வெற்றிபெற தேவையான 270 வாக்குகளை பெற , ஊசலாடும் மாநிலங்கள்தான் ( Swing states) அதிக முக்கியத்துவம் பெறுகின்றன.

ஆகையால் இந்த ஊசலாடும் மாநிலங்கள் என்றால் என்ன?

இரண்டு வேட்பாளர்களும் 270 வாக்காளர்களைப் பெற ஒரே சமயத்தில் அனைத்து மாநிலங்களிலும் வெற்றிபெற வேண்டும்.

இரண்டு கட்சிகளுமே சிறிய எண்ணிக்கையிலோ அல்லது பெரிய எண்ணிக்கையிலோ வாக்குகளை பெறுவர்.

குடியரசுக் கட்சிக்கு டெக்ஸாஸில் அதிக செல்வாக்கு உள்ளது எனவே அவர்கள் அங்கு அதிக பணம் செலவு செய்து பிரச்சாரம் செய்து பணத்தை வீணடிப்பதில்லை.

அது போல ஜனநாயக கட்சிக்கு கலிஃபோர்னியா மாகாணத்தில் செல்வாக்கு அதிகம்.

 

பிற மாநிலங்கள் நிலைமாறும் மாநிலமாகவே உள்ளன. எனவே அங்கெல்லாம், எப்படி வேண்டுமென்றாலும் முடிவு மாறும்.

குறிப்பாக தேர்தல் அவையில், 29 வாக்குகளைக் கொண்ட ஃபுளோரிடா மாகாணம் 2000 ஆம் ஆண்டில் ஜார்ஜ் புஷ்ஷிற்கு ஆதரவாக அமைந்தது. தேசிய அளவில் ஒட்டுமொத்த வாக்குகளில் அவர் வெற்றிபெறவில்லை என்றாலும், உச்சநீதி மன்றத்தில் நடைபெற்ற வழக்கை அடுத்து அவர் தேர்தல் அவை அமைப்பில் வெற்றிபெற்றார்.

ஓஹையோ, வர்ஜீனியா, கொலரோடோ, வடக்கு கரோலினா மற்றும் நெவாடா ஆகியவை பிற “நிலைமாறும்” மாநிலங்கள் ஆகும்.

புதிய அதிபர் எப்போதிலிருந்து பணியாற்றத் தொடங்குவார்?

முடிவு தெளிவானதாக இருந்தால், வெற்றி பெற்ற வேட்பாளர், அமைச்சரவையை உருவாக்குவார் மற்றும் ஒரு முழுமையான கொள்கை திட்டத்தைத் தயாரிக்கத் தொடங்குவார்.

இதற்கிடையில் பதவிக்காலம் முடிந்த “செயல்படாத அதிபர்” தான் தனது பதவிக்காலம் மூலம் விட்டுச்செல்லும் சாதனைகளை வடிவமைப்பதிலும், பொதுவாக வெள்ளை மாளிகையிலிருந்து தனது உடைமைகளை எடுத்துச் செல்வதிலும், காலத்தை செலவழிப்பார்.

அமெரிக்க அரசியல் அமைப்பின்படி தேர்தலை அடுத்து வரும் ஆண்டின் ஜனவரி மாதம் 20ம் தேதி, வெற்றி பெற்றவர் அதிபராக பதவியேற்பார்.

மரணம் அடைந்த பெண்ணுக்கு உயிர் கொடுத்த சாய்பாபா

“சீரடி என்பது உன் வீடு. இங்கே நீ எவ்வளவு நாட்கள் வேண்டுமானாலும் தங்கலாம். உன்னை யாரும் கேள்விக் கேட்க முடியாது. உன்னை யாராலும் எதுவும் செய்ய முடியாது- எதற்கும் நீ கவலைப்படாதே. என் மீது முழு நம்பிக்கை வை. நான் பார்த்துக் கொள்கிறேன்”- சாய்பாபா.

இந்த வாக்குறுதியை அடிக்கடி தன் பக்தர்களிடம் பாபா தெரிவிப்பதுண்டு. சிலர் சீரடிக்கு செல்லும் போது, மற்றவர்கள் அழைத்தார்களே என்று செல்வதுண்டு. ஆனால் அவர்கள் வீடு திரும்பும்போது முழுமையான சாய் பக்தராக மாறி இருப்பார்கள். சீரடி தலம் அவர்களை ஈர்த்து தன்னுள் ஐக்கியமாக்கி விடும்.

பாபாவின் காலடி தடம் பட்டதால் புண்ணிய தலமாக, புனிதத் தலமாகத் திகழும் சீரடிக்கு சென்ற ஒவ்வொருவருக்கும் நிச்சயம் ஒவ்வொரு விதமான அனுபவம் ஏற்பட்டது. இப்போதும் ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது. 1907-ம் ஆண்டு ஒரு பெண்ணுக்கு ஏற்பட்ட அனுபவம், பாபாவின் ஆற்றலை உலக மக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. அந்த பெண் பாபாவின் தீவிர பக்தை ஆவார். பாபா உயிரோடு இருந்தபோது அவரது மனம் கவர்ந்த பக்தர்களில் ஒருவராக ரத்தன் ஜங்கர் என்ற பக்தர் இருந்தார். அவரது உறவினரான அந்த பெண் நேரில் பாபாவை பார்க்காமலே அவர் மீது தீவிர பக்தி கொண்டிருந்தார்.

சீரடிக்கு சென்று பாபாவை தரிசனம் செய்ய வேண்டும் என்று நீண்ட நாட்களாக அவள் மனதில் ஆசை அலையடித்துக் கொண்டிருந்தது. ஆனால் சந்தர்ப்ப சூழ்நிலைகள் அவளை சீரடிக்கு செல்ல விடாமல் தடுத்துக் கொண்டிருந்தன. இத்தனைக்கும் அவள் வசித்த கிராமம் சீரடிக்கு அருகில் உள்ள கிராமம்தான்.

ஒருநாள் திடீரென அவள் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டாள். நன்றாக நடமாடி கொண்டிருந்தவள், படுத்த படுக்கையானாள். அவளை பரிசோதித்த டாக்டர், “இனி இவள் பிழைக்க மாட்டாள். இன்னும் ஓரிரு நாட்களில் செத்து விடுவாள்” என்றார். அவள் குடும்பத்தினர் கண்ணீர் விட்டுக் கதறினார்கள். ஆனால் அந்த பெண் மனதில் மட்டும் எந்த சலனமும் இல்லை.

அவள் தன் உறவினர்களிடம், “எனக்கு சீரடி சென்று பாபாவை தரிசிக்க வேண்டும் என்று மிகவும் ஆசையாக உள்ளது. ஒரே ஒரு தடவை என் கண் குளிர பாபாவை பார்த்து விட்டால், நிம்மதியாக உயிரை விட்டு விடுவேன்” என்றாள். அவளது கடைசி ஆசையை நிறைவேற்ற உறவினர்கள் முடிவு செய்தனர். நார்க் கட்டிலில் அவளைப் படுக்க வைத்து சீரடிக்கு தூக்கி வந்தனர்.

வழக்கம் போல பாபா துவாரகமாயி மசூதியில் அமர்ந்து பக்தர்களுக்கு ஆசி வழங்கிக் கொண்டிருந்தார். கட்டிலில் ஒரு பெண்ணை கிடத்தி சிலர் கூட்டமாக வருவதைப் பார்த்ததும், பாபா புருவத்தை உயர்த்திப் பார்த்தார். பாபா முன்பு அவர்கள் கட்டிலை இறக்கி வைத்தனர். பாபா “என்ன?” என்பது போல அவர்களைப் பார்த்தார். கட்டிலைத் தூக்கி வந்தவர்கள், அந்த பெண் பற்றியும், அவளுக்கு ஏற்பட்டுள்ள நோய் பற்றியும், அவளது கடைசி ஆசை பற்றியும் விளக்கமாக கூறினார்கள். பாபா அவளைப் பார்த்தார்.

பாபாவைப் பார்த்தும் அவள் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தோடியது. அவளை கருணையோடுப் பார்த்த பாபா முகத்தில் வேதனை ஏற்பட்டது. அவளது உறவினர்களைத் திரும்பிப் பார்த்தார். அவரால் கோபத்தைக் கட்டுப்படுத்த இயலவில்லை. “உயிர் பிரியும் தருவாயில் உள்ள ஒரு பெண்ணை இப்படியா அழைத்து வருவது?” என்று கத்தினார். திட்டினார். அந்த பெண்ணின் உறவினர்கள், பாபாவிடம் காணப்பட்ட சீற்றத்தைக் கண்டு ஒரு நிமிடம் மிரண்டு போனார்கள்.

ஓரிரு நிமிடங்களில் பாபாவின் கோபம் சூரியனைக் கண்ட பனி போல மறைந்து போனது. அவர் அந்த பெண்ணையே பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது ஒருவர் சற்று தைரியத்தை வரவழைத்துக் கொண்டு, “பாபா… அவள் ஓரிரு நாளில் இறந்து விடுவாள் என்று எங்கள் எல்லோருக்கும் தெரியும். அவளுக்கும் தெரியும்.

ஆனால் அவள் அதற்குள் உங்களை தரிசிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டதால் தான் இங்கே தூக்கிக் கொண்டு வந்தோம். அவள் உங்களை தரிசித்து விட்டாள். அவளது கடைசி ஆசை நிறைவேறி விட்டது. இனி கவலை இல்லை. இப்போதே நாங்கள் அவளை எங்கள் கிராமத்துக்கு தூக்கிக் கொண்டு சென்று விடுகிறோம்“ என்றார். அவரைப் பார்த்த பாபா, “இப்போது வேண்டாம். நான் எப்போது அனுமதி கொடுக்கிறேனோ அப்போது நீங்கள் சீரடியில் இருந்து புறப்படலாம்” என்றார்.

அதை அந்த பெண்ணின் உறவினர்கள் அனைவரும் ஏற்றுக் கொண்டனர். இதையடுத்து பாபா ஒரு படுக்கை விரிப்பை எடுத்து தரையில் விரித்தார். பிறகு, “இந்த பெண்ணை கட்டிலில் இருந்து இறக்கி படுக்கை விரிப்பில் படுக்க வையுங்கள்” என்றார். அதன்படி அந்த பெண் துணி விரிப்பில் படுக்க வைக்கப்பட்டாள். அவள் மீது உதியை தூவிய பாபா, “இவளை அருகில் உள்ள கூடாரத்தில் வைத்திருங்கள். இவளுக்கு குடிக்க தண்ணீர் மட்டும் கொடுங்கள். வேறு எதுவும் கொடுக்க வேண்டாம்“ என்றார்.

பாபா சொன்னது போல அந்த பெண்ணுக்கு தண்ணீர் மட்டும் கொடுக்கப்பட்டது. ஒரு வாரம் உருண்டோடிய நிலையில், அந்த பெண் சற்றுத் தெம்பானாள். அவள் முகம் பிரகாசமாக மாறியது. அவள் உயிர் பிழைத்துக் கொள்வாள் என்று உறவினர்கள் அனைவரிடமும் நம்பிக்கை ஏற்பட்டது.

8-வது நாள் அவள் எழுந்து உட்கார்ந்து விடுவாள் என்று எதிர்பார்த்தனர். ஆனால் நடந்ததோ வேறு. அவள் 8-வது நாள் தண்ணீர் குடிக்கவில்லை. படுத்த படுக்கையிலேயே அவள் உயிர் பிரிந்து விட்டது. உறவினர்கள் கதறி அழுதனர். அந்த பெண்ணை சீரடியிலேயே புதைத்து விட்டு செல்ல முடிவு செய்தனர். இதுபற்றி மற்ற உறவினர்கள் அனைவருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதிகாலையிலேயே உறவினர்கள் திரண்டு விட்டனர். அந்த பெண்ணின் உடம்பை தூக்கிச் செல்வதற்கான இறுதிச் சடங்கு கள் நடந்து கொண்டிருந்தது. அதே சமயம் சாவடியில் இருந்த பாபா, படுக்கையில் இருந்து எழுந்து வராமல் இருந்தார். அதிகாலையிலேயே கண் விழித்து பணிகளைத் தொடங்கி விடும் பாபா ஏன் இன்னும் படுக்கையில் இருந்து எழுந்திருக்காமல் உள்ளார் என்று பக்தர்கள் ஆச்சரியத்துடன் பேசிக் கொண்டிருந்தனர்.

அதே நேரத்தில், சற்றுத் தொலைவில் கூடாரத்தில் பிணமாக கிடந்த அந்த பெண் உடம்பில் லேசான அசைவு காணப்பட்டது. உறவினர்கள் அதிர்ச்சியுடன் பார்க்க, அவர்கள் கண் முன்பு அந்த அதிசயம் நடந்தது. செத்துப் போனதாக கருதப்பட்ட அந்த பெண் கண் விழித்தாள். சுற்றும் முற்றும் பார்த்தாள். அடுத்த நிமிடம் எழுந்து உட்கார்ந்தாள்.

உறவினர்களுக்கு நம்ப முடியவில்லை. ஒரு வேளை பேயாக வந்து விட்டாளோ என்று கூட பயந்தனர்.

அந்த பெண் பேசத் தொடங்கினாள்…..

“நான் வீட்டில் வேலை செய்து கொண்டிருந்தபோது, கருப்பாக ஒரு உருவம் வந்து என்னைப் பிடித்தது. அது என்னை வலுக்கட்டாயமாக இழுத்துக் கொண்டு போனது. நான் எவ்வளவோ அழுதும், அந்த கருப்பு உருவம் என்னை விடவில்லை. இதனால்தான் எனக்கு உடல் நலம் இல்லாமல் போய் விட்டது.

சீரடிக்கு வந்ததும் அந்த உருவம் என்னை நெருங்க பயப்பட்டது. எப்படியோ அந்த உருவம் நேற்று என்னை மீண்டும் பிடித்துக் கொண்டது. என்னை வலுக்கட்டாயமாக இழுத்துச் செல்ல முயன்றது. அப்போது பாபா அங்கு வந்தார். அந்த கருப்பு உருவத்தை அடித்து விட்டினார். இவளை விட்டுவிடு என்று சொல்லி திரும்ப, திரும்ப அடித்தார்.

பாபாவின் அடியை தாங்க முடியாத அந்த உருவம் என்னை விட்டு விட்டது. பிறகு இங்கிருந்தே ஓடி விட்டது. என்னை யாரோ சிலர் இங்கே அழைத்து வந்தனர். பாபாதான் என்னைக் காப்பாற்றி என் உயிரை மீட்டுக் கொடுத்துள்ளார்.

இவ்வாறு கூறி விட்டு அவள் கண்ணீர் விட்டு கதறினாள். அதே நேரத்தில் சாவடியில் இருந்த பாபா கண் விழித்தார். வெளியில் வந்த அவர் ஆக்ரோஷமாய், தான் வைத்திருந்த கம்பால் தரையில் ஓங்கி, ஓங்கி அடித்தார். “இங்கிருந்து ஓடு… ஓடு….. என்று கூச்சலிட்டார். பிறகு பாபா அந்த குடில் நோக்கி வந்தார். உயிர் பிழைத்து எழுந்து உட்கார்ந்திருந்த பெண்ணைப் பார்த்தார். அவர் முகம் பிரகாசமானது. சிரித்துக் கொண்டே அந்த பெண்ணுக்கு பாபா ஆசீர்வாதம் செய்தார்.

“உன் விதி மாற்றப்பட்டு விட்டது. இனி நீ எப்போது வேண்டுமானாலும் சீரடியில் இருந்து புறப்பட்டுச் செல்லலாம்“ என்றார். அதை கேட்டு பரவசத்தால் கண்ணீர் விட்ட அந்த பெண் பாபா காலடியில் விழுந்து வணங்கினாள். அவளோடு அவள் உறவினர்கள் அனைவரும் பாபா காலடியில் விழுந்தனர்.

மெய் சிலிர்த்து போய் இருந்த அவர்கள் அனைவருக்கும் பாபா ஆசி வழங்கி விடை கொடுத்தார். பாபாவால் ஒரு பெண் மீண்டும் உயிர் பெற்றாள் என்ற தகவல் சீரடி முழுவதும் பரவியது. பக்கத்து கிராமங்களிலும் இதுபற்றி பரபரப்பாக பேசப்பட்டது. இதனால் மக்கள் அலை, அலையாக வந்து பாபாவை தரிசித்து சென்றனர். ஆனால் பாபா எந்த சலனமும் இல்லாமல், தன்னை நாடி வந்த ஒவ்வொரு பக்தனையும், அவனையும் அறியாமல், அவனுக்குள் ஊடுருவி ஆசீர்வதித்தார்.

மேகா என்ற பக்தனிடமும் அவர் அப்படி ஒரு திருவிளையாடலை நடத்தினார். அந்த அற்புதம் பற்றி அடுத்த வாரம் வியாழக்கிழமை காணலாம்.

மாமனிதர் நடராஜா ரவிராஜின் 10 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்று

இளம்தலை முறையின் விடிவு தேடி களமிறங்கி வீர நடைபோட்ட ஓர் இளம் அரசியல் தலைவனான மாமனிதர் நடராஜா ரவிராஜ் காவியமாகி இன்றுடன் ஒன்பது ஆண்டுகள் நிறைவு பெறுகின்றன.

சாவகச்சேரியை பிறப்பிடமாகக் கொண்ட ரவிராஜ் யாழ்ப்பாணம் டிறிபேர்க் கல்லூரி மற்றும் யாழ் பரி யோவான் கல்லூரிகளில் கல்வி கற்றார். இரண்டு பிள்ளைகளின் தந்தையான இவர் 1987 ஆம் ஆண்டு இலங்கையின் உயர் நீதிமன்றத்தில் சட்டத்தரணியாக பதிவு செய்தார்.

ரவிராஜின் “ரவிராஜ் அசோசியேட்ஸ்” எனும் சட்ட நிறுவனமானது பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழான வழக்குகள், அவசரகாலச் சட்டத்தின் கீழான வழக்குகளுக்காக வாதாடியது. கொழும்பில் மனித உரிமைகள் சட்டத்தரணியாகவும் பணியாற்றினார்.

அரசியலில் இணைவு

ரவிராஜ் சட்டத்தரணியாக இருந்து அரசியலில் நுழைந்தார். 1984 முதல் 1990 வரையிலும் 1993 முதல் 1997 வரையிலும் மனித உரிமைகள் இல்லத்தை நடத்தினார். 1987 இல் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியில் இணைந்தார். 1990 ஆம் ஆண்டு அக்கட்சியின் மத்திய குழு உறுப்பினரானார்.

1997 ஆம் ஆண்டு யாழ். மாநகரசபை பிரதி முதல்வராகவும், 1998 இல் யாழ். மாநகரசபை முதல்வராகவும் தெரிவானார். 2001 மற்றும் 2004 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்டு இருமுறையும் வெற்றி பெற்றார்.

மறைவு

நவம்பர் 10, 2006 வெள்ளிக்கிழமை காலை 8 மணியளவில் ரவிராஜ் கொழும்பு நாரஹேன்பிட்டிய மனிங்ரவுனில் உள்ள அவரது வீட்டுக்கருகில் அவர் மீது இனந் தெரியாதோரால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ரவிராஜ் சிகிச்சை பலனின்றி காலை 9.20 மணிக்கு உயிரிழந்தார்.

மாமனிதர் விருது

தமிழீழத்தின் அதியுயர் தேசிய விருதான மாமனிதர் விருது வழங்கி தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் கௌரவித்துள்ளார்.

வரலாற்றில் நிலைத்து விட்ட ரவிராஜ்

எமது இளந்தலைமுறையின் விடிவு தேடி களமிறங்கி வீறுநடைபோட்ட ஓர் இளம் அரசியல் தலைவனான மாமனிதர் நடராஜா ரவிராஜ் காவியமாகி இன்றுடன் ஒன்பது ஆண்டுகள் நிறைவு பெறுகின்றன. இந்த 9 ஆண்டுகளில் எமது அரசியல் களம் வேகமான, மோசமான பல மாற்றங்களை அடைந்து, தற்போது இந்த நாட்டில் தமிழினத்தின் இருப்பே ஒரு கேள்விக் குறியாக மாறியிருக்கிறது.

இப்போது ரவிராஜ் உயிரோடிருந்திருந்தால் எமக்கு நல்லதொரு அரசியல் தலைமையை வழங்கியிருப்பார் என்றே எண்ணத் தோன்றுகிறது. ஏனெனில் இறுக்கமான அரசியல் சூழ்நிலையிலும் தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுக்கும் பாதையில் தனக்கேயுரித்தான ஆளுமையுடன் ஒரு ஜனநாயகப் போராளியாகத் தடம் பதித்து, போராடும் வல்லமையை அவர் கொண்டிருந்தார்.

1962ஆம் ஆண்டு ஆடி மாதம் 25ஆம் திகதி ஆசிரியர்களான நடராஜா மங்களேஸ்வரி தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார் ரவிராஜ். சாவகச்சேரி டிறிபேக் கல்லூரியிலும், பின் யாழ்ப்பாணம் பரியோவான் கல்லூரியிலும் கல்வி கற்று, அதன்பின் சட்டக் கல்லூரியில் பயின்று 1989ஆம் ஆண்டு சட்டத்தரணியாகக் கொழும்பில் தனது பணியைத் தொடங்கினார். அக்காலத்தில் பாதுகாப்புத் தரப்பினரால் கைது செய்யப்பட்டு, சிறையிலடைக்கப்பட்டு சித்திரவதைக்குள்ளான அப்பாவித் தமிழ் இளைஞர்களை மீட்பதற்கு தனது சட்டப் புலமையைப் பயன்படுத்தினார்.

இதனை விட அவர்களுக்கு ஆதரவளித்து வழிகாட்டுவதிலும் கொழும்பில் முன்னின்று பாடுபட்டு வந்தார். இப்பணியில் அவர் பெற்ற கசப்பான அனுபவங்கள் யாவும் இயல்பாகவே இனப்பற்று மிகுந்திருந்த அவரது உள்ளத்தை மேலும் உரமாக்கின. தமிழரின் உரிமைகளை வென்றெடுக்கும் அரசியல் போராட்டக் களத்துக்கு உந்தித் தள்ளவும் இவை காரணிகளாக அமைந்தன.

2001ஆம் ஆண்டு யாழ்ப்பாண மாநகர முதல்வராகப் பதவியேற்றது முதல் தமிழர் அரசியலில் அவர் பிரகாசிக்கத் தொடங்கினார். போர்ச் சூழலில் நலிவுற்றிருந்த மாநகர சபையின் பணிகளை மீளக் கட்டியெழுப்புவதில் மும்முரமாக ஈடுபட்டார். அதே ஆண்டில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் நாடாளுமன்ற உறுப்பினராகவும் அவர் தெரிவு செய்யப்பட்டார். பின் 2004 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலிலும் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.

மாமனிதர் ரவிராஜ் நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவி வகித்த காலம் வெறும் 5 ஆண்டுகள் தான். எனினும், அக்குறுகிய காலப்பகுதியில் எந்தவொரு நாடாளுமன்ற உறுப்பினரும் செய்யமுடியாத பணிகளை அவர் ஆற்றியிருந்தார். இதனை எல்லோரும் அறிவர். எத்தகைய வேலைப்பழு இருந்தாலும் மாதாந்தம் சாவகச்சேரியிலுள்ள அவரது இல்லமான ராஜ் அகத்தில் திரளும் மக்களைச் சந்திப்பதற்கு அவர் ஒருபோதும் தவறியதில்லை.

மக்களின் குறைகளைக் கேட்டறிந்து நிவர்த்தி செய்வதுடன், பிரதேசத்திலுள்ள கல்விமான்களதும், முதியோர்களதும் ஆலோசனைகளைச் செவிமடுத்து அதன் வழியே, தனது பணிகளைச் செய்து வந்தார். இன்னொரு ஹிரோஷிமா என ரணில் விக்கிரமசிங்கவினால் வர்ணிக்கப்பட்ட அழிந்து போன சாவகச்சேரி நகரத்தை மீளக் கட்டியெழுப்புவதிலும், தென்மராட்சிப் பிரதேசத்தில் மக்களை மீள்குடியேற்றுவதிலும் முன்னின்று உழைத்தார். துன்பப்படுவோருக்குத் தானாகவே முன்வந்து உதவும் பண்பைக் கொண்டிருந்தார். இதனால் தான் அவர் குறுகிய காலத்திலேயே எல்லோராலும் விரும்பப்படும் ஒரு தலைவரானார்.

இவை எல்லாவற்றுக்கும் மேலாகத் தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்தையும், அதற்கான நியாயங்களையும் மக்கள் அனுபவித்து வந்த சொல்லொணாத் துன்பங்களையும் சிங்கள மக்களுக்கும், சர்வதேசத்திற்கும் உரிய முறையில் கொண்டு சென்றார்.

தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகியமும் மொழிகளிலும் தேர்ச்சி பெற்றிருந்தார். அவர் அவற்றினை மிக லாவகமாகக் கையாண்டு தனது கருத்துக்களைக் கேட்போர் மனதில் உறைக்கவும், உணரவும் வைத்தார். தமிழர் பிரச்சினைகளை வெளிக்கொணர்வதில் உள்நாட்டு, வெளி நாட்டு ஊடகங்களைச் செம்மையான முறையில் பயன்படுத்தினார்.

குறிப்பாகச் சிங்கள ஊடகங்களை மிகச் செம்மையான முறையில் பயன்படுத்தி தமிழர் போராட்டத்தின் நியாயங்களையும், தமிழர் தாயகத்தின் உண்மை நிலைமைகளையும் உடனுக்குடன் சிங்கள மக்களிடம் எடுத்துக் கூறினார்.

இவரது இந்தப் பணிதான் அவரது உயிரைப் பறிப்பதற்குரிய முதன்மைக் காரணியாக இருந்தது எனப்பரவலாகக் கருதப்பட்டது.தெற்கிலுள்ள சிங்களக் கடுங் கோட்பாட்டாளர்கள் அவரை விடுதலைப் புலியாகவே கருதினர். தமிழர் உரிமைக்காகப் போராடுபவர்கள் சிங்கள மக்களின் விரோதிகள் என்ற சிங்கள கோட்பாட்டாளரின் கூற்றைப் பொய்யென்று சிங்கள ஊடகங்களினூடாக எடுத்துக்கூறி, இனங்களுக்கிடையிலான நல்லுறவை ரவிராஜ் வளர்த்து வந்தார். மனித உரிமைகள் மீது அதீத நம்பிக்கை கொண்டிருந்த ரவிராஜ் மனித உரிமை அமைப்புகளில் இணைந்து இலங்கையிலுள்ள சகல மக்களதும் உரிமைக்காகக் குரல் கொடுத்து வந்தார்.

இலங்கை இனப்பிரச்சினைக்கு போர் மூலம் ஒரு போதும் தீர்வு காணமுடியாது என்பதில் அசையாத நம்பிக்கை கொண்டிருந்த அவர் ஐக்கிய இலங்கைக்குள் சமஷ்டி முறையின் கீழ் அதிகாரங்களைப் பகிர்வதன் மூலமே யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவர முடியுமென நம்பினார்.

தமிழர் பிரச்சினைக்கு யுத்தம் மூலம் தீர்வு காணமுடியாது என ராவிராஜ் தென்னிலங்கை மக்களுக்கு எடுத்துக் கூறி வந்ததால் தான் அவர் கொல்லப்பட்டார் எனக் கருதிய தென்னிலங்கை சிங்கள, முஸ்லிம், தமிழ் மக்கள் அவரது புகழுடலை விகாரமாதேவி பூங்காவுக்குச் சுமந்து சென்று யுத்தம் பிரச்சினைக்குத் தீர்வாகாது எனக் கோஷமெழுப்பினர்.

கொழும்பில் நடந்த அவரின் இறுதி அஞ்சலி நிகழ்வில் பல்லாயிரக்கணக்கான சிங்கள மக்களும் தலைவர்களும் கலந்து கொண்டனர். இது ரவிராஜ் இன உணர்வுள்ள ஒரு தமிழனாகவும், நாட்டுப்பற்றுள்ள ஒரு இலங்கையராகவும் திகழ்ந்தமையை எடுத்துக் காட்டியது.

என் அப்பாவை இழந்து துன்பத்தில் வீழ்ந்து விட்டோம் எல்லோரும் இப்போது வருகிறார்கள். அப்பாவின் உடல் புதைக்கப்பட்டு விடும். அத்தோடு எல்லோரும் மறந்து விடுவார்கள். இந்த அர்த்தமுள்ள வார்த்தைகள் ரவிராஜின் இறுதி நிகழ்வின்போது அவரது மகள் பிரவீனாவால் கூறப்பட்டவை.

அவர் கூறியது போல ரவிராஜை மட்டுமல்ல தமிழ்மக்களின் விடிவுக்காக தமது உயிர்களைத் தியாகம் செய்த அனைத்து உடன் பிறப்புக்களையும் கூட நாம் மறந்து விட்டோம். இவ்வாறே இன்றைய நிலைமைகள் தமிழர்களின் விடியலை நேசிக்கும் ஒவ்வொருவரையும் எண்ணவும், ஏங்கவும் வைக்கின்றன.

சத்திய இலட்சியத்துக்காக வாழ்ந்த உயர்ந்த மனிதர்களை சாவு என்றும் அழித்து விடுவதில்லை. சரித்திர நாயகர்களாக எமது தேசத்தின் ஆன்மாவில் அவர்கள் என்றும் வாழ்வார்கள் என்று கூறப்பட்ட வார்த்தைகள். தமிழர் வாழ்விலும் வரலாற்றிலும் ரவிராஜ் என்றும் நிலைத்திருப்பார் என்பதையே உணர்த்தி நிற்கின்றன.

கர்ப்ப காலத்தில் மசக்கையை சமாளிக்க முடியாமல் அவதியா?

கர்ப்ப காலத்தில் ஏற்படக்கூடிய ஹார்மோன் மாற்றங்கள் மசக்கை ஏற்படுவதற்கு காரணமாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. அதனால் தான் மசக்கை ஏற்படுகிறது என்று உறுதியாக கூற முடியாது. சில பேருக்கு கர்ப்ப காலம் முழுவதும் மசக்கை அறிகுறிகள் பிரச்சனையாகவே இருந்து கொண்டிருக்கும்.

கர்ப்பம் தரித்த பெண்களுக்கு முதல் மூன்று மாதங்களுக்கு மசக்கை ஏற்படுவது மிகவும் சாதாரண ஒன்று. மசக்கையின் ஆரம்பமும், எத்தனை நாட்கள் தொடரும் என்பதில் மட்டும் சிறிய வேறுபாடுகள் இருக்கும். கர்ப்பம் தரித்ததும் பெண்ணின் தேகம் ஹெச்.சி.ஜி என்ற ஹார்மோனை சுரக்க ஆரம்பிக்கிறது. இரட்டை குழந்தைகள் என்றால் ஹெச்.சி.ஜி சுரப்பு அதிகமாக இருக்கும்.

மசக்கையை முழுவதும் தவிர்ப்பது என்பது முடியாத காரியம். ஆனால் குறைக்க வழிகள் இருக்கிறது.

வயிறு நிறைய சாப்பிட்டு இருந்தாலோ அல்லது காலியான வயிற்றோடு இருந்தாலோ குமட்டல் அதிகமிருக்கும். மூன்று வேளைச் சாப்பாட்டிற்குப் பதில் கொஞ்சம் கொஞ்சமாக அடிக்கடி உணவருந்துவது நல்லது. திரவ ஆகாரம் அதிகமாக எடுத்துக்கொள்ளலாம். ஆனால் ஓரே நேரத்தில் அனைத்தையும் அருந்தக்கூடாது.

இஞ்சி குமட்டலை தவிர்க்க வல்லது. நீங்கள் சாப்பிடும் உணவில் காரம், கொழுப்பு சத்துகள் கொண்ட எண்ணெய் பலகாரங்கள் போன்ற பதார்த்தத்தை குறைத்துக்கொள்ளுங்கள். ஏனெனில் இவை குமட்டல், வாந்தியை ஏற்படுத்தக்கூடியது.

குறிப்பிட்ட சில உணவுகளின் வாசமே மசக்கை பெண்களுக்கு குமட்டலை ஏற்படுத்தும். மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படும் சில வைட்டமின் மாத்திரைகளை காலையில் உட்கொள்கிற போது சிலருக்கு குமட்டல் இன்னும் மோசமாகலாம். இவர்கள் மாத்திரையை எடுத்துக்கொண்டதும் சாக்லேட் சாப்பிடலாம். இதனால் குமட்டல் குறைய வாய்ப்புண்டு.

வயிறு நிறைய தண்ணீர் குடிக்கக்கூடாது. போதுமான அளவு மட்டுமே தண்ணீர் எடுத்துக்கொள்ள வேண்டும். சாப்பாட்டிற்கு அரை மணி நேரத்திற்கு முன் தண்ணீர் குடியுங்கள். நாள் முழுவதும் திரவ ஆகாரம் எடுத்துக்கொள்ளுங்கள். சாப்பாட்டின் போது தண்ணீர் குடிக்க வேண்டாம்.

தர்பூசணியும் குமட்டலுக்கு நிவாரணம் தரும். சாப்பிட்டதும் படுக்ககூடாது. குமட்டலை காரணம் காட்டி உணவை தவிர்க்காதீர்கள். அளவுக்கு அதிகமாக குமட்டல், வாந்தி இருந்தால் வாந்தியோடு வலி, காய்ச்சல் வந்தால், மூன்று மாதங்களைத் தாண்டியும் மசக்கை அறிகுறிகள் தொடர்ந்து கொண்டிருந்தால் மருத்துவரை அணுக வேண்டியது அவசியம்.

மசக்கை கர்ப்பிணி பெண்களுக்கோ, வயிற்றில் வளரும் சிசுவிற்கோ தீங்கு விளைவிப்பதில்லை. ஆனால் வாந்தி அதிகம் இருந்தால் உண்ணும் உணவை தங்கவிடாமல் இருக்கலாம். இந்த நிலை கடுமையாக இருந்தால் ஊட்டச்சத்து கிடைப்பது குறைந்து போய் குழந்தைக்கும், தாய்க்கும் பாதிப்பு ஏற்படலாம். இந்த நிலையில் மருத்துவரை அணுகி ஆலோசனை பெற வேண்டியது அவசியம்.

சிகரட் உற்பத்தி நிறுவனங்களுக்கு வரவு செலவுத்திட்டம் கொடுத்த இடி

புகையிலை உற்பத்தி நிறுவனங்கள் ஜனாதிபதி செயலகத்திற்கு 500 மில்லியன் ரூபா செலுத்தப்பட வேண்டும் என்று நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.

2017ஆம் ஆண்டுகான வரவுசெலவுத்திட்டத்தின் மீதான வாசிப்பின் போதே இதை குறிப்பிட்டார்.

நாட்டில் அண்மையில் சிகரட்டின் விலை மற்றும் சிகரம் உற்பத்திப் பொருட்களுக்கான விலை என்பன அதிகரிக்கப்பட்டன.

சிகரட் பாவனையாளர்களை முற்றிலுமாக அதிலிருந்து மீட்பதற்காகவே இவ்வாறு விலை அதிகரிக்கப்படுவதாக ஜனாதிபதி தெரிவித்திருந்தார்.

அந்த வகையில் சிகரட் பாவனையாளர்களுக்கும், உற்பத்தியாளர்களுக்கும், நிறுவனங்களுக்கும் இந்த வரவுசெலவுத்திட்டம் மேலும் இடியை கொடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் குறைப்பு (முழு விபரம்)

2017 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தின் அடிப்படையில் அத்தியாவசியப் பொருட்கள் சிலவற்றின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன.

பாசிப் பயறு கிலோ ஒன்று 15 ரூபாவாலும், பருப்பு 10 ரூபாவாலும், சீனி 2 ரூபாவாலும், சமையல் எரிவாயு 25 ரூபாவாலும், மண்ணென்ணெய் லீற்றருக்கு 5 ரூபாவாலும், நெத்தலி கருவாடு 5 ரூபாவாலும் உருளைக்கிழங்கு 5 ரூபாவாலும் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன.

இதேவேளை உள்நாட்டு டின் மீன் 425 கிராம் 125 ரூபா கட்டுப்பாட்டு விலையிலும் உள்நாட்டு பால்மா 400 கிராம் 250 ரூபா கட்டுப்பாட்டு விலையிலும் விற்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழில் காதலியை வெள்ளை வானில் கடத்திய காதலன்! சீரழியும் இளைஞர் சமுதாயம்

யாழ்ப்பாணம் – வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பிரதேசத்தில் 20 வயதுடைய யுவதி ஒருவரை வெள்ளை வானில் வந்த சிலர் கடத்திச் சென்றுள்ளனர்.

சித்தங்கேணியில் தந்தையுடன் வீட்டில் தங்கியிருந்த குறித்த யுவதியே இவ்வாறு கடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் யுவதியின் காதலன் என்று தன்னை அடையாளப்படுத்திக் கொண்ட பல்கலைக்கழக இளைஞன், யுவதியை தனக்கு திருமணம் செய்து வைக்குமாறு தந்தையிடம் கோரியுள்ளார்.

எனினும் அதற்கு குறித்த யுவதியின் தந்தை மறுப்பு தெரிவித்துள்ளார்.

இதனால் நேற்று மாலை ஐவருடன் வெள்ளை வானில் குறித்த இளைஞன் தந்தையை தாக்கி விட்டு யுவதியை கடத்திச் சென்றுள்ளனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும், கடத்திச் செல்லப்பட்ட யுவதி குறித்து இதுவரையில் எவ்விதமான தகவல்களும் அறியப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபரீதமான விளையாட்டு.. 140 அடி உயரத்தில் இருந்து விழுந்த இளம்பெண்! பதற வைக்கும் வீடியோ

தென் கொரியாவில் பங்கி ஜம்பிங் விளையாட்டின் போது நடந்த விபரீத சம்பவம் ஒன்று வீடியோவாக வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தென் கொரியாவின் Chuncheon நகரில் பங்கி ஜம்பிங் என்பது மிகவும் பிரபலமான விளையாட்டாக உள்ளது.

காலில் கயிரைக் கட்டிக் கொண்டு உயரமான இடத்தில் இருந்து கொண்டு குதிக்கும் திரில் அனுவத்தை இதன் மூலம் பெறலாம். பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகளுடனே இது மேற்கொள்ளப்படுகிறது.

இந்நிலையில் இந்த விளையாட்டில் ஒரு இளம்பெண் ஈடுபட்ட போது அந்த கயிறு அப்படியே அறுந்தது.

இதனால் அவர் 140 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்தார். இருப்பினும் அவர் தண்ணீரில் விழுந்ததால் சிறிய காயங்களுடன் அதிர்ஷ்டவ்சமாக உயிர் தப்பியுள்ளார்.

சிலவற்றை சரியாக மேற்கொள்ளாமல் விட்டுவிட்டதால் இந்த விபரீத சம்பவம் நடந்ததாக அந்த பெண் தெரிவித்துள்ளார்.

மொபல் போனில் எடுக்கப்பட்ட இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

முதல் ஒருநாள் போட்டி: இலங்கையை வீழ்த்தி இங்கிலாந்து அபார வெற்றி

கொழும்பில் நடந்த இலங்கை அணிக்கு எதிரான மகளிர் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் அணி 4 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது.

இவ்விரு அணிகள் மோதிய முதல் ஒருநாள் போட்டி நேற்று கொழும்பில் நடைபெற்றது.

இதில் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி டெஸ்ட் போட்டியைப் போன்று ஆடத் தொடங்கியது. இதனால் 50 ஓவரில் அந்த அணி 6 விக்கெட் இழப்பிற்கு 168 ஓட்டங்களே எடுத்தது.

ஹாசினி, நிபுனி ஹன்சிகா தலா 26 ஓட்டங்கள், சமரி அத்தப்பத்து, வீரக்கொடி தலா 24 ஓட்டங்கள், சுரன்ங்கியா 27 ஓட்டங்கள் எடுத்தனர்.

இதைத் தொடர்ந்து 169 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என களமிறங்கிய இங்கிலாந்து அணி 29.3 ஓவரிலே 2 விக்கெட்டுக்கு 171 ஓட்டங்கள் பெற்று 8 விக்கெட்டுகளால் அபார வெற்றி பெற்றது.

அந்த அணி சார்பில், நடாலி சிவர் 47 ஓட்டங்களும், அணித்தலைவர் ஹெதர் நைட் 45 ஓட்டங்களும், டாமி பிமவுண்ட் 41 ஓட்டங்களும் எடுத்தனர்.

இந்த வெற்றியின் மூலம் இங்கிலாந்து அணி 4 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என முன்னிலையில் உள்ளது.625-0-560-350-160-300-053-800-668-160-90-10 625-0-560-350-160-300-053-800-668-160-90-11 625-0-560-350-160-300-053-800-668-160-90-12 625-0-560-350-160-300-053-800-668-160-90-13

வவுனியாவில் விடுதி வசதி இல்லாமையினால் கல்வியை கைவிடும் மாணவர்கள்

வவுனியா தொழில்நுட்பக்கல்லூரிக்கு விடுதி வசதி அமையுமாக இருந்தால் அதிகளாவன மாணவர்கள் கற்கும் வசதி ஏற்படும் என வவுனியா தொழில்நுட்பக்கல்லூரியின் அதிபர் ஆ.நற்குனேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

தொழில்நுட்பக்கல்லூரியில் புதிய மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ள நிலையில் அது தொடர்பாக கேள்வி எழுப்பும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்,

கடந்த வருடம் 645 மாணவர்கள் எமது தொழில்நுட்பக்கல்லூரியில் பதிவினை மேற்கொண்டிருந்தனர். இவர்களில் 500 மாணவர்களே பரீட்சையில் தோற்றவுள்ளனர். 145 மாணவர்கள் இடை விலகிவிட்டனர். இடை விலகியவர்கள் தூர இடங்களில் இருந்து வருவதனால் போக்குவரத்து பிரச்சனைகளை எதிர்கொள்வதுடன் தங்குமிடங்களுக்கும் அதிகளவான நிதியை செலவிடவேண்டியேற்படுகின்றது.

எனவே எமது தொழில்நுட்பக்கல்லூரியில் விடுதி வசதி இருக்குமாயின் அதிகளவான மாணவர்கள் தங்கி நின்று கற்கக்கூடியதாக இருக்கும் என்பதுடன் இடை விலகலும் குறைவாக காணப்படும்.

இந் நிலையில் எதிர்வரும் 21 ஆம்திகதி முடிவுத் திகதியிடப்பட்டு 24 பாட நெறிகளுக்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றது. இவற்றில் முழு நேர பயிற்சி நெறிகள் இலவசமாக கற்பிக்கப்படும் என்பதுடன் அவர்களுக்கான பயண பருவச்சீட்டுகளும் 1000 ரூபா ஊக்குவிப்பு பணமும் வழங்கப்படவுள்ளது.

எனவே பாடசாலை கல்வியை நிறைவு செய்த 17 வயதுக்கும் 29 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் விண்ணப்பித்து சிறந்த கற்றல் செயற்பாடுகளில் இணைந்து கொள்ளுமாறும் அவர் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது

யார் எதிர்த்தாலும் எனது மகனை அரசியலுக்கு கொண்டு வருவேன் – முன்னாள் ஜனாதிபதி

எவர் எதிர்த்தாலும் தனது புதல்வர் விமுக்தி குமாரதுங்கவை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அத்தனகல்ல தொகுதியின் அமைப்பாளராக நியமித்து, அடுத்த தேர்தலுக்கு அவரை தயார்ப்படுத்த போவதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தனக்கு நெருக்கமானவர்களிடம் கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அண்மையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கம்பஹா மாவட்ட தலைவர்களின் கூட்டத்தில் இந்த யோசனை கொண்டு வரப்பட்ட போது கடும் எதிர்ப்பு முன்வைக்கப்பட்டதன் காரணமாக முன்னாள் ஜனாதிபதி கடும் மன வருத்தத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.

விமுக்தி மக்கள் மத்தியில் இருக்காத காரணத்தினால், அவரால் தேர்தலில் வெற்றிப் பெற முடியாது என சுதந்திரக் கட்சியின் கம்பஹா மாவட்ட தலைவர்கள் முன்னாள் ஜனாதிபதியின் முகத்திற்கு நேராக கூறியுள்ளனர்.

இவ்வாறான நிலைமையில், அடுத்த தேர்தலில், விமுக்தியை அத்தனகல்ல தொகுதியில் நிறுத்த முன்னாள் ஜனாதிபதி தீர்மானித்துள்ளார்.

இதற்கான வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன் லண்டனில் இருக்கும் விமுக்தி குமாரதுங்க விரைவில் இலங்கைக்கு அழைக்கப்படவிருப்பதாக பேசப்படுகிறது.

புதிதாக முளைத்த இராட்சத முள்ளங்கி! வரிசையாக நிற்கும் பொது மக்கள்!

மஸ்கெலியா – பிரவுண்ஸ்வீக் தோட்டத்தில் வசிக்கும் முத்துசாமி சிவனு என்பவரின் வீட்டுத் தோட்டத்தில் புதுமையான இராட்சத முள்ளங்கி ஒன்று காய்த்துள்ளது.

விற்பனைக்காக முள்ளங்கி விதையை விதைத்த போது சுமார் மூன்று மாதங்களுக்கு பின் இவ்வாறு காய்த்துள்ளதாக தோட்ட உரிமையாளர் தெரிவிக்கின்றார்.

குறித்த முள்ளங்கி சுமார் 3 கிலோ 800 கிராம் நிறைவுடையது என்பது குறிப்பிடதக்கது.625-0-560-320-160-600-053-800-668-160-90-1 625-0-560-320-160-600-053-800-668-160-90-2 625-0-560-320-160-600-053-800-668-160-90-3